ரணிலின் திட்டங்களை மறுசீரமைக்கும் அநுர தரப்பு: கர்மவினை என்கிறார் சம்பிக்க
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய சில திட்டங்களை எதிர்த்த அரசாங்கம் தற்போது அவற்றை மறுசீரமைக்கும் விதத்தில் செயற்படுவது கர்மவினை என்றே கூறவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரணில் உருவாக்கிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை அரசாங்கம் மறுசீரமைப்பு செய்ய முனைவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணில் விக்ரமசிங்க
''ரணில் விக்ரமசிங்க தனது இரண்டாண்டுகால பதவியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நவீன தொழில் உலகினை கருத்திற் கொண்டு கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ஆகியோர் தலைமையில் குழுவை நியமித்து மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதைய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தை தோற்றுவித்தார்கள்.
இதனால் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட கல்வி மறுசீரமைப்பு பணிகளை இந்த அரசாங்கம் எவ்வித மாற்றமுமில்லாமல் செயற்படுத்த தீர்மானித்துள்ளது" என்றார்.
