கடத்தி செல்லப்பட்ட சிறுமியை 9 நாட்களின் பின்னர் மீட்ட விசேட அதிரடிப்படையினர்..!
பதுளை லுணுகல காவல்துறை பிரிவின் உடகிருவ வனப்பகுதி மற்றும் உடுகிருவ பிரதேசத்தில் நேற்று காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் கடந்த 3 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர்.
அத்துடன், சிறுமியை கடத்தி சென்ற இரண்டு சந்தே நபர்களையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான சிறுமியை குறித்த சந்தேக நபர்கள் கடத்திச் சென்றிருந்ததாகவும் 18 மற்றும் 53 வயதான நபர்களே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் லுணுகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக லுணுகல சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபர்கள் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து லுணுகல காவல்துறையினர் வழங்கிய தகவலுக்கு அமைய பசறை மற்றும் லுணுகல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து கூட்டாக தேடுதலை நடத்தி சிறுமியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
