கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் - வலி. மேற்கு தவிசாளர் கோரிக்கை
அனைத்து தரப்பினரும் கதவடைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலே காலாகாலமாக இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
மக்களுக்கான நீதியான விசாரணைகள்
இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியான விசாரணைகள் நடைபெறவுமில்லை, அதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இது இவ்வாறு இருக்கையில் சென்றவாரம் முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டிலே ஒரு குடும்பஸ்தரின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த குடும்பஸ்தர் ஏதாவது தவறு இழைத்திருந்தால் கூட அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்து அவருக்கெதிரான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தண்டிப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
அவரது மரணத்திற்கு காரணமான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தே காணப்படுகிறது. இந்த பிரச்சினை தென்னிலங்கையில் ஏற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.
செம்மணி மனிதப் புதைகுழி
அண்மைக்காலமாக அகழப்படும் செம்மணி மனிதப் புதைகுழியில் 150ற்கு அண்மித்ததான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமா அல்லது அந்த விடயங்கள் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு காணப்படுகிறது.
400 தொடக்கம் 600 பேரை கொலை செய்து புதைத்ததாக கிருசாந்தி கொலைவழக்கு குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ளார்.
அந்தவகையில் முத்துஐயன்கட்டு கொலை சம்பவத்தையும் இந்த இராணுவமே செய்துள்ளதாக எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறக்கூடாது என்பதற்காகவும், இராணுவ அதிகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
எனவே வர்த்தக சங்கம், உணவகங்கள், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் போன்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த கதவடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
