கியூ.ஆர் முறைமை நிரந்தர தீர்வு அல்ல! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவித்தல்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, நாட்டின் நிதித் திறனை கருத்திற்கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
அதேவேளை சிறந்த முகாமைத்துவத்துடன் மக்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காகவே குறித்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம்
எனினும், எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் ஊடாக எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக வரம்பு தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று (26) நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பம்
வங்கி அனுமதிப்பத்திர பிரச்சினை காரணமாகவே எரிபொருட்களை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எரிபொருள் தாமதத்தால் அனைத்து எரிபொருள் நிலையங்களில் மீண்டும் வரிசைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

