உயர்தர மாணவர்களுக்காக அரசு வழங்கிய விசேட சலுகை! நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு அதிபர் நிதியில் இருந்து புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் வீதம் நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் உள்ள 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள்
அதேவேளை, இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.