சட்டத்தரணியின் பாரிய நிதி மோசடி - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
முதலீட்டுக்கான சந்தர்ப்பம் என்று கூறி வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபாவிற்கும் மேல் பணத்தை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டநிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக பல நீதவான் நீதிமன்றங்களிலும், பல உயர் நீதிமன்றங்களிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பிணை சட்டத்தின் 14ஆவது பிரிவின் பிரகாரம் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சட்டத்தரணியின் பாரிய மோசடி

ஹொரணை, பொருவடந்த பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியான ரொஷான் தெஹிவல என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார சமரநாயக்க என்ற வர்த்தகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் இந்துக டி சில்வா, சந்தேகநபர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 400, 389, 386 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2019 பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் இது வியாபார விடயம் எனக் கூறி முறைப்பாட்டாளரிடமிருந்து 406 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நம்பிக்கையை மீறி மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா கணக்கிற்கு வழங்கப்பட்ட காசோலைகள்

சந்தேக நபரும் அவரது மனைவியும் பணமில்லா கணக்கிலிருந்து முறைப்பாட்டாளருக்கு காசோலைகளை வழங்கியதாக முறைப்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.