மன்னாரில் ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை
மன்னார் நகரசபை எல்லைக்குள் சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதார துறையினர் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் சிற்றூண்டி சாலை இனங்காணப்பட்டது.
நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை
இந்த நிலையில் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி வைத்தியசாலை பகுதியை அண்டிய உணவகங்கள் இரண்டின் மீதும் மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதியில் இரு உணவகங்கள் மீதும் இவ்வாறு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக உரிய சுகாதார நடமுறையை பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள், கையுறை பயண்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளடங்கலாக பல்வேறு குற்றங்களை அடிப்படையாக கொண்டு உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |