காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாயவுள்ள சட்ட நடவடிக்கை
பாயவுள்ள சட்ட நடவடிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலை ஆக்கிரமித்தவர்கள் கண்காணிப்பு
அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போராட்டம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
காவல்துறை, குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல குழுக்களினால் அதிபர் செயலகம் உட்பட அடையாளம் காணப்பட்ட இடங்களில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
