உலகை மிரட்டும் புதிய நோய் - ஆர்ஜென்டினாவில் 4 பேர் பலி
ஆர்ஜென்டினாவில் லெஜியோனேயர்ஸ் நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் நான்கு பேர் லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த தொற்று ஏனைய நாடுகளுக்கும் பரலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் முதல் பதிவான இந்த இறப்புகள் அனைத்தும், சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன.
அந்த வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 70 வயது பெண் ஒருவரும் பலியாகியுள்ளார். 48 வயதான ஒரு நபர் நேற்று இறந்தார். மேலும் 7 பேருக்கு இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லெஜியோனெல்லா பக்டீரியா தொற்று
டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு முதலில் கொரோனா, சளி மற்றும் ஹான்டா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பின், நடத்திய பரிசோதனையில் லெஜியோனெல்லா பக்டீரியா தொற்று உறுதியானது.
லெஜியோனேயர்ஸ் நோயால் அந்த நால்வருக்கும் கடும் நிமோனியா ஏற்பட்டதாக தெரிகிறது. நோயாளிகளுக்கு அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை மாகாண சுகாதார அமைச்சர் லூயிஸ் மெடினா ரூயிஸ் கூறுகையில்,
இந்த நோய் தொற்றில், நச்சு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் நிராகரிக்க முடியாதவை. அந்த வைத்தியசாலையில் உள்ள குளிரூட்டல் அமைப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றார்.
டுகுமான் மாகாண மருத்துவக் கல்லூரியின் தலைவர் ஹெக்டர் சேல் கூறுகையில், இந்த பக்டீரியா தொற்று தீவிரமாக உள்ளது. இந்த தொற்று பொதுவாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 11 பேருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று விபரித்தார்.
பக்டீரியாவால் ஏற்படும் தீவிரமான நோய்
லெஜியோனேயர்ஸ் நோய் என்பது பக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிரமான நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகும்.
இந்த நோய் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க படைவீரர்(லெஜியோன்ஸ்) குழுவின் கூட்டத்தில் தோன்றியது.
லெஜியோனெல்லா பக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது அல்லது லெஜியோனெல்லா கொண்ட தண்ணீரை தற்செயலாக விழுங்கும்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படலாம்.
இந்த பக்டீரியா அசுத்தமான நீர் அல்லது அசுத்தமான குளிரூட்டல் அமைப்புகளில் இருந்து உருவாகி பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

