நேட்டோ விடுத்துள்ள கடும் எச்சரிக்கை: அச்சத்தில் இந்தியா
பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்நிலை ஏற்படும் என நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரைச் சுற்றியுள்ள தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரூட்டே, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் தலைவர்கள் இது குறித்து வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால் உங்களுக்கு நூறு வீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த மூன்று நாடுகளும் இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் ஏனெனில் இந்த வரிகள் உங்களை கடுமையாகப் பாதிக்கும் என அவர் வலியுருத்தியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து நேட்டோவிடமிருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இராணுவ உதவி
உக்ரைனுக்குப் புதிய இராணுவ உதவிகளை அறிவித்திருந்த ட்ரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தியிருந்தார்.
உக்ரைனுடன் 50 நாட்களுக்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறுதி எச்சரிக்கைகள் விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது எந்தப் பலனையும் தராது என்றும் ரியாப்கோவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

