ஆட்சியைக் கவிழ்க்க பாதாளக் குழுவுடன் எதிர்க்கட்சி – அரச தரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் உண்மையான அச்சத்தையும், அவர்களது அடிமனதில் உள்ள வங்குரோத்து நிலைமையையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது. "நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய நிர்வாக கட்டமைப்பு மற்றும் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பழைய அரசியல் நடைமுறைகளை இனிமேலும் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
முறைகேடாகப் பணம் சம்பாதிக்க வழி
இதுவே எதிர்க்கட்சியினரின் கருத்துக்களில் ஏமாற்றமாகப் பிரதிபலிக்கின்றது. புதிய விதிமுறைகளின்படி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை அனைத்தும் தற்போது முழுமையாக டிஜிட்டல் அமைப்பில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வெளிப்படையான டிஜிட்டல் முறையினால், எதிர்காலத்தில் பழைய பாணியில் ஊழல் அரசியல்வாதிகள் எவரும் தப்பித்துக் கொள்ளவோ, முறைகேடாக அரசியலில் ஈடுபடவோ முடியாது.
அவர்களால் தங்களது நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ முறைகேடாகப் பணம் சம்பாதிக்க வழிவகுக்க முடியாது என்பதுடன், எவரும் வரி வலையமைப்பில் இருந்தும் தப்பிக்க முடியாது.
இதனால் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்குப் பொறுக்கூற வேண்டியிருக்குமோ என்ற பயமும், தங்களின் வாரிசுகளுக்காக அமைத்து வைத்திருந்த ஊழல் அரசியல் பாதை முற்றிலும் இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் எதிர்க்கட்சியினருக்கு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எப்போதும் சுய இலாபத்துக்காக வாய்ப்புள்ள பக்கம் தாவிவிடும் அரசியல் குணம் கொண்டவர். எதிர்க்கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் தங்களது மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் உண்மையை அவர் இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரச் சலுகைகள்
தற்போதைய அரசு ஏதேனும் பொருளாதார வீழ்ச்சி அல்லது இயற்கை பேரிடரால் கவிழ்ந்துவிடாதா அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த ஆட்சியை கவிழ்த்துவிட முடியாதா என்ற இரகசியக் கனவுடனேயே எதிர்க்கட்சியினர் தினமும் இரவில் தூங்கி, காலையில் விழிக்கின்றார்கள் என்பதை தயாசிறியின் பேச்சு மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய ஊழல், மோசடி மற்றும் சுயநல அரசியல் கலாச்சாரமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. ஆனால், தற்போதைய பொருளாதாரச் சூழல் நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதுடன், உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதன் நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளன.
அண்மையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டமை, அத்துடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தராசு பாராது முன்னெடுக்கப்படும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் இதற்கு மிக முக்கிய சான்றுகளாகும்.
சர்வதேச நாணய நிதியம் கூட, நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை அடைந்துள்ள இந்த வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டியுள்ளது.
தற்போதைய அரசு நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை வேகமாகவும், தொடர்ச்சியாகவும் மேம்படுத்தி வருகின்றது. வரி வசூலிப்பு முறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் மக்களுக்குப் பரவலான பொருளாதாரச் சலுகைகள் கிடைக்கும். அதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு மக்கள் மீதான சுமை முழுமையாகக் குறைக்கப்படும்." - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |