சித்தார்த்தனிடமிருந்து சி. வி. கேவிற்கு பறந்த கடிதம் : வீட்டுடன் இணையுமா சங்கு !
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C.V.K.Sivagnanam) அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த. சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சி.வி.கே சிவஞானத்திற்கு இன்று (03) அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி நீங்கள் அனுப்பி வைத்த கடிதம் கிடைக்கப்பெற்றேன்.
உள்ளூராட்சித் தேர்தல்
இன நலன் குறித்து எங்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமை பற்றி கடிதத்தில் நீங்கள் தெரிவித்துள்ள விடயங்களில் எக் காலத்திலும் நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்ல.
உள்ளூராட்சித் தேர்தலில் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய விரும்பும் நீங்கள், தற்போது நாம் அமைத்துள்ள கூட்டணி உங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாகவும் உங்கள் கட்சிக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு தேர்தல்களைச் சந்திக்கும் நிலை கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பை அடுத்தே ஏற்பட்டது.
தனித்துப் போட்டியிட்டு பின்னர் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணக்கருவை தங்களது மத்திய குழு மட்டக்களப்பில் கூடி எடுத்தீர்கள்.
பாதகமான விளைவு
இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சி வெளியேறியது.
பிரிந்து நின்று செயற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை ஆணித்தரமாக நாம் முன்வைத்த போதும் தமிழரசுக் கட்சியின் செயல் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சம்பந்தன் அண்ணரிடம் எமது நிலைப்பாட்டை நாம் நேரடியாக முன்வைத்த போதும் கூட அவரும் தமிழரசுக் கட்சியின் முடிவினை ஏற்று செயற்படுமாறு எம்மை அறிவுறித்தினார்.
அன்று கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய பின்னர் நாமும் ரெலோ அமைப்பும் இயன்றவரையிலும் ஏனைய தமிழ் அமைப்புகளை ஐக்கியப்படுத்தி கூட்டமைப்பாக செயற்படும் நோக்கில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பாக பயணிக்க தொடங்கினோம்.
அவசியமான ஒற்றுமை
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் அங்கத்துவக் கட்சிகளினதும் தொடர்ச்சியான பிளவுகளினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கடந்த நாடளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஆழமாக உணர்ந்துகொண்டோம்.
மேலும் கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐந்து கட்சிகளாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியியாக போட்டியிட்ட நாம், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒற்றுமை எனும் விடயத்தை மேலும் வலுவானதாக்க சாத்தியமான வகையில் மேலும் சில அமைப்புகளை இணைத்துப் பயணிக்க தீர்மானித்து தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாகவே இன்று பல கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றை உருவாக்க முடிந்துள்ளது.
நீங்கள் விரும்புவதுபோல, தமிழரசுக் கட்சியுடன் இக்கூட்டணியும் இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ் தேசியத்திற்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் நாமும் பெரு விருப்பம் கொண்டுள்ளோம்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடாத்தக் கூடிய தீர்மானம் ஒன்றை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
