இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணய மோசடி! களமிறங்கியது ஐசிசி விசாரணை குழு
இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்புப் பிரிவு தனது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ எப்கிரேவ் மற்றும் அதன் சுயாதீனத் தலைவர் சுமதி தர்மவர்தன ஆகியோர், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சனக டி சில்வா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது, நடைபெற்று வரும் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஐசிசியிடமிருந்து பெறக்கூடிய சாத்தியமான உதவிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
உளவுத்துறை ஆதரவு
போட்டிகளை நிர்ணயம் செய்ய வீரர்களைத் தூண்ட முயன்ற குற்றச்சாட்டின் பேரில், ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா மற்றும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 9.5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கை அதிகாரிகளின் இந்த விசாரணைக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உளவுத்துறை ஆதரவு உள்ளிட்ட அனைத்துக் கூட்டு உதவிகளையும் வழங்குமாறு அமைச்சர் சுனில் குமார கமகே ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |