முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மிக குறைவு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் தற்போது காணப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 34 வீதமாகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மற்றும் 48 மணித்தியாலங்களில் மாத்தறை, காலி, மேல் மாகாணம், வடமேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்4, “சில பகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளதுடன், நேற்று அதிகபட்சமாக சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதுளை பகுதியில் பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு
அத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளில் 25 முதல் 30 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வறண்ட வலயத்தின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. குறிப்பாக, மாதுரு ஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்துள்ளது.
எனினும், இந்த மழைவீழ்ச்சியுடன் பிரதான ஆறுகளின் நீர்மட்டங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் பதிவாகவில்லை எனவும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களிலும் பெரியளவிலான அதிகரிப்பு ஏற்படவில்லை.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று (08) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்வரும் பெரும்போகத்திற்காக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி கிடைக்கும் என” எதிர்பார்ப்பதாகவும் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |