தேசத்தின் விடுதலை ஊக்கி மாமனிதர் சத்தியமூர்த்தி
இன விடியல் என்ற ஒன்றை கனவாக சுமந்து கடைசிகாலம் வரை பயணித்தும் அந்த கனவுகள் நனவாகாதவிடத்து ஏற்படுகின்ற வலிகள் வார்த்தைகளால் வரிப்பதற்கியலாத ஒன்று என்று சொல்லாம்.
அந்த புனிதமான கனவுடன் பயணித்து மண்ணில் விதையானவர்கள் எண்ணிலடங்காது அந்த வரிசையில் தாயகத்தில் தமிழர் போராட்ட வாழ்வியலில் ஒரு விடுதலை ஊக்கியாக வாழ்ந்து இறுதிவரை தேசக்கனவோடு உயிர்துறந்த மாமனிதர் சத்தியமூர்த்தி காலத்தோடு கலந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகிறது.
உலகத்தமிழர்களாலும் தேசத்தின் தலைமகனாலும் அதிகமாக நேசிக்கப்பட்ட சத்தியமூர்த்தி அவர்கள் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் 03.09.1951 பிறந்தார்
வெண்புறா தொண்டு அமைப்பு
தனது இளம்பராயம் முதல் இறுதிக்காலம் வரை தமிழர் தேச நலனை முன்னிறுத்தி தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் முதலாவது தலைவராகவும் வெண்புறா தொண்டு அமைப்பின் ஸ்தாபகராகவும் இருந்து பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய இவரது செயற்பாடுகள் எப்போதுமே உலகத்தமிழர்களின் நினைவலைகளில் நீங்காது என்பது மறுப்புக்கூறமுடியாத ஒரு உண்மையாகும்.
தொழில்முறை வைத்தியராக இருந்து தாயகத்தில் பல ஏழை மக்களுக்கு மருத்துவப்பணியாற்றிய இவர் அரச இயந்திரத்தின் அடக்குமுறை பார்வையில் சிக்கி இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு சித்திரவதைகளுக்குட்படுத்ப்பட்டு அவயங்களில் சேதம் விளைவிக்கப்பட்ட பின்னரும் கூட தாயக இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த சேவைச்செம்மல் என்று இவரை குறிப்பது சாலப்பொருந்தும்
தனது வாழ்க்கை காலப்பகுதியில் இலங்கை அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல சந்தர்ப்பங்களில் பாதிப்புக்குள்ளானபோதும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக விடுதலை உத்வேக நெருப்பை எல்லோருள்ளும் மூளச்செய்த மிக முக்கியமான பணியினை சிரமேற்கொண்டவராக தன்னை அர்ப்பணித்தார்
இன்றைய நாளில் உயர் தேசக்கனவை சுமந்து தனது வாழ்க்கை காலப்பகுதியில் பெரும்பாலான நாட்களை அதற்காகவே அர்ப்பணித்த மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களை இன்றயை நாளில் ஐபிசி தமிழ் நன்றியோடு நினைவேந்துகிறது