போரை நடத்தியதே நான்தான்..! பிரித்தானியாவின் முடிவுக்கு எதிராக மகிந்த ஆவேசம்
விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் நிரூபிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கும், சொத்துக்களை வைத்திருப்பதற்கும் தடைகளை அந்நாட்டு அரசாங்கம் அறித்தமைக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிக்கையில் மகிந்த, “தொடர்புடைய குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன்.
கருணா அம்மான் மீதான தடை
இலங்கை தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது இராணுவம் அந்த முடிவை செயல்படுத்தியது.போரின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன்.
நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போரை நடத்தினோம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது.
அநுர அரசாங்கம்
2008 ஆம் ஆண்டில் அமெரிக்க FBI ஆல் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட அமைப்பை 2009 ஆம் ஆண்டில் இலங்கை தோற்கடித்தது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து சட்டரீதியான துன்புறுத்தல்களிலிருந்து தனது ஆயுதப் படைகளைப் பாதுகாக்க பிரித்தானிய அரசாங்கம் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறப்புச் சட்டத்தை இயற்றியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
