வவுனியாவில் நிலைபெறப்போபோகும் மகிந்தவின் கிவுல் ஓயா கனவு!
கிவுல் ஓயா திட்டம் 2011 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், மகாவெலி அபிவிருத்தி அதிகார சபையின் System L திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரசின் கட்டுப்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், பல பெரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாகவே கிவுல் ஓயா திட்டம் கருதப்படுகிறது.
வடக்கு பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க, விவசாய நிலங்களை விரிவுபடுத்த, யுத்தத்திற்குப் பிந்தைய “தேசிய அபிவிருத்தி”யை வேகப்படுத்த இந்தத் திட்டம் அவசியம் என அப்போதைய அரசாங்கம் விளக்கியது.
அதே நேரத்தில், மகாவலி திட்டங்களின் அனுபவம் காரணமாக, நில மறுவினியோகம் மற்றும் குடியேற்றம் தொடர்பான சந்தேகங்களும் அக்காலத்திலேயே எழுந்தன.
அதிகமான செலவு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்திலேயே, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், இந்தத் திட்டம் பல தமிழ் கிராமங்களை நீரில் மூழ்கடிக்கும், பாரம்பரிய சிறிய குளங்கள் மற்றும் உள்ளூர் பாசன அமைப்புகளை அழிக்கும், நில உரிமை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தன.

எனினும், அக்கால அரசியல் சூழலில், இந்த எதிர்ப்புகள் பெரிதாக கருத்தில் கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறித்த திட்டம் ஆரம்பத்தில் ரூ. 4,170 மில்லியன் செலவில் நிறைவேற்றப்படும் என கணிக்கப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் இது ரூ. 23,456 மில்லியனாக உயர்ந்தது. இந்த 460% க்கும் அதிகமான செலவு உயர்வு, திட்டத்தின் நடைமுறை சாத்தியம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், 2023 டிசம்பர் 31 அன்று திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதன் மூலம், “இந்தத் திட்டம் உண்மையில் அவசியமா?” என்ற விவாதம் மீண்டும் மேலெழுந்தது. அத்தோடு, தற்போதுள்ள மனித-யானை மோதல் மேலும் மோசமடையக்கூடும்.
ஏனெனில் திட்டத்தை செயல்படுத்துவது மேலும் வாழ்விட இழப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டம்,
“அபிவிருத்தி” என்பது அனைவருக்கும் சமமான நன்மையை வழங்க வேண்டிய ஒரு அரசியல்-பொருளாதார கருவி.
ஆனால் இலங்கையின் வரலாற்றில் பல தடவைகள், அந்தச் சொல் சிறுபான்மை மக்களின் பூர்வீக நிலங்களை பறிக்கும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளதை நாம் கண்டு வருகிறோம்.
வவுனியா மாவட்டத்தில் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ள கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டம், அந்தத் துயரமான வரலாற்றின் இன்னொரு அத்தியாயமாகவே தோன்றுகிறது.
2011ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23,456 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு, இவ்வாண்டு வரவு–செலவுத் திட்டத்தில் 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, இது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாக விளக்கப்படுகிறது.
ஆனால் அதன் உள்நோக்கத்தை ஆராயும் போது, உண்மை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
மகாவலி – எல் வலயம்
கிவுல் ஓயா திட்டத்தின் பிரதான பயனாளிகள், 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாவலி – எல் வலயத்தில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளே. 480,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வலயம், ஆரம்பத்திலிருந்தே இனப்பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிடப்பட்டதாகும்.

காணியற்ற அனைத்து இன மக்களுக்கும் சமமாக நிலம் வழங்கப்பட வேண்டிய நிலையில், முழுமையாக சிங்கள குடியேற்றமே அங்கு மேற்கொள்ளப்பட்டது. மகாவலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதை அறிந்திருந்தும், வடக்கு மாகாணத்தில் குடியேற்றத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றின் தொடர்ச்சியாகவே இன்று கிவுல் ஓயா திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் வவுனியா வடக்கின் காடுகள், குளங்கள், வயல்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் மழைநீரை அணை கட்டி தேக்கி, அந்த நீரை மகாவலி – எல் வலயத்திற்கு திருப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினால் 6,000 விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பயன் பெறுவோர் பெரும்பாலும் புதிய குடியேற்றவாசிகளே.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் தமிழ் மக்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் எந்த நேரடியான நன்மையும் இல்லை. மாறாக, 3,900 ஏக்கருக்கு மேற்பட்ட நீரேந்து பிரதேசம், அவர்களின் பாரம்பரிய நிலங்களை மூழ்கடிக்க உள்ளது.
இதன் மேலாக, கடந்த 2021ஆம் ஆண்டு அதிவிசேட வர்த்தமானி மூலம், 13,000 ஏக்கருக்கு அதிகமான நிலம் வனவளத் திணைக்களத்தால் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள், வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு போன்ற கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்கள். மனிதனால் இன்னும் பாதிக்கப்படாத அடர்ந்த காடுகள், கைவிடப்பட்ட சிறு நீர்ப்பாசன குளங்கள், பாரம்பரிய வயல்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன.
சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கைகள் கூட, இத்திட்டத்தால் அரிய தாவர–விலங்கு இனங்கள் அழிவடையும் என்றும், யானை–மனித மோதல் தீவிரமடையும் என்றும், தொல்பொருள் சின்னங்கள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றன. ஆனாலும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கிடப்பில் போடப்பட்ட பணிகள்
கிவுல் ஓயா திட்டமானது 2011ம் ஆண்டு திட்டமிடப்பட்டு நான்கு வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு இப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த 23,456 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இவ்வருட வரவு செலவு திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்ட முன்மொழிகளில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் திட்டம் என கூறப்பட்டாலும் 1983ம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்ற பகுதியான மகாவலி - எல் வலயத்தின் நீர்த்தேவைக்காகவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
மகாவலி -எல் வலயம் 480,000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இத்திட்டத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஆணையம்( UNDP) மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) இணைந்து 1964-1968 காலப்பகுதியில் திட்டமிட்டிருந்தார்கள்.
இப்பிரதேசத்தில் குடியேற்றத்தை செய்து குடியேற்றவாசிகளிற்கான நீர்ப்பாசன ஆதாரங்களாக தண்ணிமுறிப்புக்குளம் மற்றும் பதவியாக்குளங்களை பயன்படுத்துவதுடன் மேலதிக நீரை மகாவலி ஆற்றிலிருந்து வடமத்திய மாகாண கால்வாயினூடாக ( NCP-Canal) வழங்குவதாக திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்வாறு மகாவலி ஆற்றின் நீரை கொண்டுவருவது சாத்தியமற்றது என அறிந்திருந்தாலும் அவர்களது உள்நோக்கம் வடக்கு மாகாணத்தில் இனப்பரம்பலை மாற்றுவதற்காக குடியேற்றம் செய்வதாகவே இருந்தது.
மகாவலி - எல் வலயத்தில் குடியேற்றம் செய்யப்படும் போது இந்தநாட்டில் வாழும் காணியற்ற அனைத்து இன மக்களையும் குடியேற்றியிருக்க வேண்டும். ஆனால் முழுமையான சிங்கள குடியேற்றமே அங்கு செய்யப்பட்டது என தமிழ் அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் குடிப்பெருக்கம் மற்றும் அதிகரித்த நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மகாவலி ஆற்றிலிருந்து நீரை கொண்டுவருவது சாத்தியமற்றதாக இருப்பதால் கிவுல் ஓயா நீர் விநியோகத்திட்டத்தை முன்மொழிவதாக சொல்லப்படுகிறது.
மகாவலி-எல் வலயத்திற்கான நீரை வழங்கும் “கிவுல் ஓயா”திட்டத்திற்கான நீர் வரத்தானது வவுனியா வடக்கின் அடர்ந்த காடு மற்றும் நீர்ப்பாசன குளங்கள், வயல்களில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரால் உருவாகும் சிற்றருவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆற்றை 4.41கி.மீ நீளமான அணைக்கட்டொன்றை கட்டுவதனூடாக நீரை தேக்குவதாகும்.
இவ்வாறு தேக்கப்படும் 3900 ஏக்கர் நீரேந்து பிரதேசம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வருவதுடன் இந்நீர்த்தேக்கத்தில் 64MCM அ-து 51,904 ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்படுவதோடு 13 கி.மீ நீளமான கால்வாயினூடாக 1700ஹெக்ரயர் ( 4100 ஏக்கர்) புதிய வயல் நிலத்திற்கு நீர் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதுகாலவரை குடியேற்றவாசிகள் பயன்படுத்திய 1700 ஏக்கர் வயலில் இரு போகம் விவசாயம் செய்வதற்கான மேலதிக நீரை வழங்கமுடியும்.
கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இத்திட்டத்தினூடாக கிடையாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதனூடாக திட்ட நன்மைகளாக 4372 ஏற்கனவே உள்ள விவசாயிகளும் 1628 புதிய விவசாயிகளுமாக 6000 விவசாய குடும்பங்கள் பயனடைவர்.
அத்துடன் ஏற்கனவே உள்ள 700ஹெக்ரேயர் (1700 ஏக்கர் )வயல் நிலங்களில் இரண்டு போகங்களிற்கான நீரை உறுதிப்படுத்தலுடன் 1700ஹெக்ரேயர் (4080 ஏக்கர்) புதிய நிலத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவர்.
சுகாதாரம், கல்வி மற்றும் சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தல், உள்ளூர் வீதிகள் மற்றும் ஏனைய வீதிகளை மேம்படுத்தி அயல் நகரங்கடன் இணைத்தல் ஆகியவற்றுடன் அங்கு வாழும் மக்களிற்கான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் வழங்கல் என்பனவாகும்.
கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனால் வவுனியா மாவட்டம் பல சவால்களை சந்திக்க நேரிடும் என கருதப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்டுத்துவதற்காக ஏற்கனவே மகாவலி-எல் வலயத்திற்காக ஒதுக்கப்பட்ட 480,000 ஏக்கர் நிலத்திற்கு மேலதிகமாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக 13,000 ஏக்கருக்கு அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பிரதேசம் வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராமசேவையாளர் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகும்.
விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இதுவரை மனிதனால் அழிக்கப்படாத அடர்ந்த காடு, கடந்த கால இடம்பெயர்வுகளால் பாவிக்கப்படாத சிறு நீர்பாசன குளங்கள், வயல்கள் காணப்படுகிறன.
திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படப்போகிறது. இவற்றுள் இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதுடன் அருகிவரும் தாவர, விலங்கினங்களின் முழுமையான அழிவும் ஏற்படும் எனவும் காடுகளில் வாழும் குறித்த பிரதேசத்திற்கு உரித்தான தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவடையும் என இத்திட்டத்திற்காக செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே உள்ள யானை-மனித மோதல் மேலும் மோசமடையும் எனவும் அங்கு காணப்படும் தொல்பொருள் சின்னங்கள் பாதிப்படையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் அச்சமடைய காரணம்
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர்பிரிவு மற்றும் அதன் அயல் கிராமங்கள் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம்.

இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். 1983 காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர்.
இதனால் நீண்காலமாக அங்கிருந்த தமிழ்மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது. “திரிவச்சகுளம்”; வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளமும் ஏறத்தாள 150 ஏக்கரிற்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது.
இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப்பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச்செய்கைக்காக துப்பரவு செய்தபோது வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டது.
வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024ல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநலசேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர்அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றில் வழக்குத்தாக்கல்
வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகாரசபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்? புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
இது இவ்வாறு இருக்க ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கரிற்கு அதிகமான பிரதேசம்(1000 ஏக்கர் என்று சிலர் கூறுகின்றனர்) திட்டமிட்டவகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் ஒன்றரை மாதங்களிற்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜே.சீ.பி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு 1½ மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ரூபா ஒரு இலட்சம் தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகள் துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்?
அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்யமுடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைளில் எந்த ஆட்சியிலும் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை.
சுதந்திரத்திற்கு பின்னராக ஆட்சிப்பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது.
இதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகின்றது. அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் திட்டப் பின்னணி வன்னியில் உள்ள தமிழ் சமூகங்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து இப்பகுதியில் பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்துள்ளனர்.
இத்தகைய திட்டங்கள் வரலாற்று ரீதியாக நில பயன்பாட்டு முறைகளை மாற்றியமைத்துள்ளன, தற்போதுள்ள தமிழ் கிராமங்கள் மற்றும் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை அச்சுறுத்தியுள்ளன, மேலும் மக்கள்தொகை மாற்றத்திற்கு வழிவகுத்தன என்று எச்சரித்துள்ளனர்.
போருக்குப் பிந்தைய இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நில உரிமைகள் மற்றும் மக்கள்தொகை கவலைகள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளாகவே உள்ளன.
தமிழ் அரசியல் கட்சிகள் அரசால் வழங்கப்படும் நிலம் கையகப்படுத்துதல், குடியேற்ற முறைகள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் என அவை வகைப்படுத்துவது குறித்து தொடர்ந்து கவலைகளை எழுப்புகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |