மெனிங் மிதக்கும் சந்தை பகுதியை போராட்டகாரர்களுக்கு ஒதுக்க தீர்மானம்! ரணில் வெளியிட்ட தகவல்
கொழும்பு மெனிங் மிதக்கும் சந்தை அமைந்துள்ள பகுதியை போராட்டகாரர்களுக்கு ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டகாரர்களுடன் நேற்று அதிபர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின் போது மேலும் தெரிவிக்கையில்,
போராட்டகாரர்கள் மற்றும் இளைய தலைமுறையினருடன் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட நாம் தயார். பொருளாதார போராட்டத்தில் வெற்றி பெறுவதே தற்போதுள்ள சவாலாகும்.
ஆகவே, இந்த பொருளாதார போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்காக அனைத்து வகையிலும் இளைஞர், யுவதிகளின் பயங்களிப்பை பெற எதிர்பார்த்துள்ளேன். ஜனநாயகமற்ற அரசியல் மற்றும் வன்முறையை நான் எதிர்க்கின்றேன்.
பல்கலைக்கழகங்களுக்குள் பகடிவதை
தற்போதைய பல்கலைக்கழக கட்டமைப்பு வீழ்ச்சியடைய பிரதான காரணம் பகடிவதையே ஆகும்.
எனவே, அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பகடிவதை நிறுத்தி, சிறந்த சமூக ஜனநாயகத்திற்காக முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
மேலும், பணிப்புறக்கணிப்புகள் சகல காலங்களில் நடந்தாலும் பணிப்புறக்கணிப்புகளால் ஒரு நாடு முன்நோக்கி செல்ல முடியாது. பேச்சுவார்த்தை மூலம் நடு நிலையான இடத்திற்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், நாட்டுக்காக கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அனைத்து போராட்டகாரர்களும் அங்கம் வகிக்கும் வகையில் பிரதான அணியை உருவாக்கிக்கொள்ளுங்கள். அந்த அணியில் அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும், பெண்களும் அடங்கியிருப்பது அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.