தமிழக முதல்வரை இலங்கை வருமாறு அழைப்பு
மிலிந்த மொரகொட - தமிழக முதல்வர் சந்திப்பு
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு, சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறை என இந்தியாவில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்காக, இலங்கைக்கு வழங்கிய 2 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளுக்காக முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்ராலின், இலங்கையின் நிலைமை குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், இதன் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் முதல் கப்பலை உடனடியாக அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களுடனான இரண்டாவது கப்பலை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவாதிக்கப்பட்ட விடயங்கள்
இதற்கிடையில் உயர்ஸ்தானிகரும், முதல்வரும் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.
மேலும் இரு மாநிலங்களுக்கும் இடையில், பழமையான மற்றும் வலுவான இன, கலாசார மற்றும் மத தொடர்புகளை மீளாய்வு செய்து அவற்றை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
High Commissioner @MilindaMoragoda met with the Chief Minister of Tamil Nadu @mkstalin today (4) in Chennai and discussed ways and means to further strengthen relations between Tamil Nadu and #SriLanka. pic.twitter.com/VIn1Y9Kf2y
— Sri Lanka in India (@SLinIndia) June 4, 2022
இலங்கையில் பல்கலைக்கழகம் போன்ற பொருத்தமான இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தமிழக முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்ராலினின் இந்த விருப்பத்தை வரவேற்ற உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அழைப்பு விடுத்துள்ளார்.