வெளிநாட்டில் கோடிகளில் கொட்டிய பணம் - ஒரு நொடியில் உதறித் தள்ளிய தமிழர்
கோடிகளில் வருமானம்
என்னதான் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டினாலும் தாயகத்தில் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை தமிழர் ஒருவர் புரிந்து கொண்டு சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.
தமிழகத்தின் நெல்லையை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் பிரபஞ்சன் என்ற மகனும் உள்ளனர். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு சவுதி, குவைத் போன்ற நாடுகளில் மாதம் இலட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார். அதாவது மொத்தமாக கோடிகளில் கூட வருமானம் பார்த்தார்.
கையில் பணம் கொட்டினாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று கருதினார். இதையடுத்து பணம் கொட்டும் வெளிநாட்டு வேலையை ஒரு நொடியில் உதறி தள்ளினார் ஓம் பிரகாஷ். பின்னர் கடந்த 2018ல் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார்.
அங்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்கிறார். அதைவிட தனது தோட்டத்தில் ஊர் மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார்.
தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்.
ஏதோ ஒன்றை தொலைத்த மனநிலை
பிரகாஷ் கூறுகையில், வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று நினைத்தேன். எனவே சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன்.
அதை செய்தும் வருகிறேன். இதோடு நான் சொந்த கிராமத்தில் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்கிறேன் என திருப்தியுடன் தெரிவித்துள்ளார்.

