திரளாக ஒன்றுகூடி மக்கள் முழக்கம்..!! பின்கதவால் நழுவிய அமைச்சர்
அமைச்சர் மகிந்த அமரவீர நழுவல்
மக்களின் எதிர்ப்புக் காரணமாக கமநல சேவைகள், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தனது உத்தியோகபூர்வ வாகனத்தை கைவிட்டு பின்கதவால் நழுவியுள்ளார்.
இச்சம்பவம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
துணைப் பயிர்ச்செய்கை தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் கலந்துரையாடல் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மகிந்த அமரவீரவும் கலந்து கொண்டார்.
மக்களின் எதிர்ப்பு
அகில இலங்கை விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பிரதேச செயலகத்தின் வெளியே ஒன்றுகூடி அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
சிறுபோக பயிர்ச்செய்கைக்கு உரம் வழங்குமாறும், விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தினால் அமைச்சர் மகிந்த அமரவீர, தனது உத்தியோகபூர்வ வாகனத்தை கைவிட்டு பிரதேச செயலகத்தின் வாகனம் ஒன்றில் ஏறி பின்கதவால் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

