காதல் விவகாரம் - அமைச்சரின் மகனின் மோசமான செயல்
கடந்த 26 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் வைத்து மாணவன் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது 26 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சிற்கு சொந்தமான வாகனம்
கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சிற்கு சொந்தமான WP KX 8472 என்ற இலக்கமுடைய வாகனத்தில் வருகை தந்த அமைச்சரின் மகன் உள்ளிட்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கருப்பு உடை அணிந்த உயரடுக்கு பாதுகாவலர்கள் குழு டிஃபெண்டர் வாகனங்களில் வந்து அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் மகனின் காதலிக்கு குறித்த மாணவன் காதல் கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் குறித்து, காவல் அவசர சிகிச்சைப் பிரிவிற்கும், கிரிபத்கொட காவல்துறையினருக்கும் அங்கிருந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காவல்துறையினரின் அக்கறையின்மை
கிரிபத்கொட காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் இந்த வகுப்பு அமைந்துள்ளது. எனினும் தாக்குதலை தடுக்க காவல்துறையினர் விரைந்து வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கைத்துப்பாக்கிகளுடன் சிவில் உடையில் சுமார் ஏழு காவல்துறையினர் அங்கு வந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.