கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பணம் இத்தனை கோடியா..! வெளியானது அதிர்ச்சித் தகவல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதேவேளை, 2020 ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 50 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையான முதல் காலாண்டில் மாத்திரம் 58 ஆயிரத்து 800 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது.
பணம் அச்சிடுவது நிறுத்தப்படும்
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பதவிக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க வந்த பின்னர், பணத்தை அச்சிடுவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்தார்.
எனினும் அந்த தீர்மானம் இதுவரை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய நிதியமைச்சரான ரணில் விக்ரமசிங்க, 2024 ஆம் ஆண்டு பணம் அச்சிடுவது நிறுத்தப்படும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.