கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை துரத்தும் புதிய தொற்று
குரங்கு அம்மை
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.
பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு
இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்புகளை பெரிய அம்மை தடுப்பூசி குறைக்கும் திறன் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

