கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு - பிள்ளைகளை தவிக்கவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் தனது இரண்டு பிள்ளைகளையும் பாலத்தில் தவிக்கவிட்டு தாயொருவர் ஆற்றில் குதித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (26) பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து குறித்த பெண் ஆற்றில் குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிள்ளைகளை பாலத்தில் தவிக்கவிட்டு
இதன்போது தனது18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டே ஆற்றில் குதித்துள்ளார்.
இவ்வாறு ஆற்றில் குதித்த அந்தப் பெண் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞன் குறித்த பெண்ணை காப்பாற்றினான்.
கணவன் மனைவிக்கு இடையில் தகராறு
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் இதனால் விரக்தியடைந்த நிலையில் இவ்வாறு ஆற்றில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளையும் அளுத்கம காவல்துறையினர் அழைத்து வந்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் வழங்கியுள்ளனர்.
அளுத்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
