எம்.பி சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் சிறை!!
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
மூன்று வழக்குகள் தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சாமர சம்பத்திற்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டது, ஆனால் இன்று வரை ஒரு வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக விளக்கமறியலில் இருந்த அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
