யாழ். நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து , யாழ். நகர் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோக செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பேரூந்து நிலையம் , வர்த்தக நிலையங்கள் ,வைத்தியசாலை முன்றல் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிற்கு கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.
தமிழர் தாயகமெங்கும் கஞ்சி விநியோகம்
தமிழினத்தின் வலிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் கஞ்சி வழங்கப்படுகின்றது என்பதை எடுத்தியம்பும் துண்டுபிரசுரமும் இதன்போது வழங்கப்பட்டிருந்தது.
இன்று முதல் எதிர்வரும் மே 15ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆரம்பம்
இதற்கமைய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டிற்கு செல்லும் பிரதான சந்தியில் இன்று காலை 8:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் ஆரம்பமானது.
மதியப் பொழுதில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களினை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.