முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தனை) எதிர்வரும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளில் முல்லைத்தீவில் (Mullaitivu) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முள்ளியவளை - சந்தியம்மன் ஆலயம் முன்பாக இன்று ( 13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன் சமூக செயற்ப்பாட்டாளர்கள், மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
இதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நேற்று (12) முதல் எதிர்வரும் மே18ம் திகதிவரை வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழமை.
அந்த வகையில் வடக்கு, கிழக்கு முழுவதும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



