லண்டனில் கொடூர கொலை - புலம்பெயர் இலங்கை தமிழருக்கு கிடைத்த தீர்ப்பு
இலங்கைத் தமிழர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி லண்டனில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆப்கான் அகதியொருவரை மேற்கு லண்டன் பகுதியில் 15 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கான் அகதி கொடூர கொலை

ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது தவறான தகவலால் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டும், சுலைமானுக்கு 21 ஆண்டும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அளித்த தகவல்

தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரிஷ்மித் சிங் சட்டவிரோத குழுக்களில் தொடர்புடையவர் அல்ல எனவும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதால், பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.