ஆளுநர் தொடர்பான நளினியின் வழக்கில் உயர்நீதிமன்றம் பின்னடிப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதியான நளினி தாக்கல் செய்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டுமென நளினி தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் எனக்கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆயினும் இந்த தீர்மானத்தில் ஆளுநர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்தவழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், இந்த விடயத்தில் விடுதலை செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாதென கருத்துத்தெரிவித்ததுடன் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.