சட்டக் கல்லூரிக்குள் நுழைய நாமல் மேற்கொண்ட தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு..!
சிறிலங்கா பொதுஜன பெரமுன் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கல்வித் தகைமைகள் சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ச தனது சட்டக்கல்லூரி பரீட்சையை தனி அறையில் இருந்து எழுதினார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரிக்கான நுழைவு அனுமதியை பெற்றிருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுமதிக்கு போதுமான தகுதியின்மை
பிரித்தானியா மற்றும் இலங்கையில் முன்னெடுக்க்பட்ட தகவல் திரட்டுகை மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரிக்கு தேவையான நுழைவு அனுமதியை பெற்றிருக்காத நிலையில், சட்டக் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டள்ளதாக என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச பிரித்தானியாவின் நகர பல்கலைக்கழகத்தில் தனது பட்டக் கல்வியை பூர்த்தி செய்துள்ளார். எனினும், இந்த பட்டக் கற்கை நெறியில் நாமல் ராஜபக்சவின் பெறுபேறுகள் சட்டக்கல்லூரி அனுமதிக்கு போதுமான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பட்டம் தொடர்பிலும் பல்வேறு முரண் நிலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சட்டத்தரணியாக உருவாவதற்கு கற்க வேண்டிய ஒரே இடமாக சட்டக்கல்லூரி கருதப்படுகின்றது. இந்த கற்கை நெறிக்கான அனுமதியே மிகவும் கடினமான ஒன்று என சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆயிரக்கணக்கானவர்கள் நுழைவு அனுமதிக்காக அனுமதி பரீட்சையில் தோற்றி ஒரு சில பேர் அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.
நாமலுக்கான அனுமதி
இதேவேளை, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் சட்ட பட்டத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு சட்டக் கல்லூரியில் நுழைவு அனுமதி பரீட்சையில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்ற விலக்கு அளிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நாமல் ராஜபக்ச நுழைவு அனுமதி பரீட்சை இன்றி சட்டப் பட்டம் என்ற இரண்டாவது தகுதி முறையில் சட்டக் கல்லூரிக்குள் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார்.
லண்டன் நகர பல்கலைக்கழகத்தில் தமக்கு சட்டத்துறையில் பட்டம் உண்டு எனக் கூறி நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரியில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாமல் ராஜபக்ச தனது சட்ட கற்கை நெறியை ஆரம்பித்தார்.
நாமல் ராஜபக்ச தொடர்பான தகவல்களை மீளாய்வு செய்யும் போது அவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் லண்டன் நகர பல்கலைக்கழகத்தில் கற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவர் நாடு திரும்பிய பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதி கோரியுள்ளார்.
லண்டனில் நகர பல்கலைக்கழகத்தில் பட்ட கற்கை நெறிக்கான சான்றிதழ் உண்டு எனக் கூறி அவர் இவ்வாறு அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி இலங்கை சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத சான்றிதழ்
இந்த இந்த விண்ணப்பம் அதே நாளில் பரிசீலனை செய்யப்பட்டு, அவருக்கு சட்டக் கல்லூரி அன்றயை நாளிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சட்டக் கல்லூரியின் தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுக்கொண்டவர் தொடர்பில் ஆவண உறுதிப்படுத்தல்களுக்கு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என தெரியவருகிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் கற்றமைக்கான உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே குறித்த மாணவரை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளில் அனுமதி வழங்கப்படும் நடைமுறை இலங்கை சட்டக் கல்லூரியில் கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ட சான்றிதழானது இலங்கை சட்டக் கல்லூரியினால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதிகளை கூட பூர்த்தி செய்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் , இலங்கை சட்டக் கல்லூரியானது லண்டன் நகர பல்லைக்கழகத்தின் பட்டத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கையை 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 20 நாட்களின் பின்னரே அவர் கற்ற பல்கலைக்கழகத்தை சான்றிதழை அங்கீகரிப்பதற்கு சட்டக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சான்றிதழ் மாயம்
அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டச் சான்றிதழுடன் ஒருவருக்கு இலங்கை சட்டக்கல்லூரியில் அனுமதி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடையாது என இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நாமலின் சட்டக் கல்லூரிக்கான அனுமதி விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டம் அடிப்படையில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் பட்ட சான்றிதழையும் உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்ற போதிலும் நாமல் ராஜபக்ச அவ்வாறு ஆவணங்களை சமர்ப்பித்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ராஜபக்சவின் விண்ணப்பம் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த தகவல்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட கோப்புக்களில் அவரது பட்ட சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாறாக இலங்கை சட்டக் கல்லூரியினால் லண்டன் நகர பல்கலைக்கழகத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட கடிதம் ஒன்றே அவரது கோப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச சட்டஇளமாணி கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து மூன்றாம் வகுப்பில் சித்தி எய்தியுள்ளதாக அந்த கடிதத்தில் லண்டன் நகர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எனினும் சட்ட கல்லூரியில் அனுமதி பெற்று கொள்வதற்கு இந்த தகுதி போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
துணைவேந்தரின் கையொப்ப சிக்கல்
இலங்கை சட்டக் கல்லூரியின் அனுமதி தகுதியின் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஒருவர் சட்டம் தொடர்பில் பட்டம் ஒன்றை பெற்றுக் கொண்டால், அவருக்கு அந்நாட்டில் சட்டத்தரணியாக பணியாற்றுவதற்கு தகுதி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு எனும் நாமல் ராஜபக்சவின் இந்த பட்டமானது பிரித்தானியாவில் சட்டத்தரணியாக செயல்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் சட்டத்தரணியாக செயற்பட வேண்டுமாயின் சட்ட இளமாணி பட்டத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டுமெனவும் இரண்டாம் வகுப்பு அடிப்படையில் சித்தி எய்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நாமல் ராஜபக்சவின் சட்ட இளமாணி சான்றிதழில் அவர் மூன்றாம் வகுப்பில் சித்தியெய்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாமலுக்கு பிரித்தானியாவில் சட்டத்தரணியாக பணியாற்ற முடியாது.
அவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையிலும் அவருக்கு சட்டக் கல்லூரியில் கற்பதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திய வருவதாகவும் எனவே இது குறித்து கூடுதல் தகவல்களை வழங்க முடியாது எனவும் இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் அல்விஸ் தெரிவிக்கின்றார்.
நாமல் ராஜபக்சவின் பட்ட சான்றிதழில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெல்கம் கிலீஷ் கையொப்பமிட்டுள்ளார். இந்த சான்றிதழ் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த துணைவேந்தர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து பதவி விலகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
துணைவேந்தரிடம் கேட்டபோது தான் பதவி விலகியதன் பின்னர் எந்த ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாமலுக்கான விருதில் சர்ச்சை
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் துணைவேந்தராக கில்ஸ் இருக்கவில்லை எனவும் பதில் துணைவேந்தராக பேராசிரியர் ஜூலிஸ் வின் வர்க் கடமையாற்றினார் எனவும் லண்டன் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை சட்டக் கல்லூரிக்கு நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த பட்ட சான்றிதழ் குறித்த ஆவணங்களை அவர் ஸ்ரீ ஜெயரத்தினபுர பல்கலைக்கழக விண்ணப்பங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ச உயர் கல்விக்காக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது பட்டக் கற்கை ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார் எனவும் அந்த ஆவணங்களுக்கு சட்ட கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சட்டக்கல்லூரியில் ஒர் பாடத்தில் நாமலுக்கு திறமை சித்தியும் அதற்கான விருதும் வழங்கப்பட்ட போதிலும் அதேவிதமான பாடங்களில் லண்டன் பல்கலைக்கழகத்தில் குறைந்த புள்ளிகளை மட்டுமே நாமல் எடுத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரி பரீட்சைகளில் மேசாடி செய்தார் என 2010ம் ஆண்டில் சக மாணவரான துஸார ஜயரட்ன குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிரேஷ்ட சட்டத்தரணியான உதித்த எகலஹேவ விசாரணை நடத்திய போதிலும் விசாரணை முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |