பதவி வேண்டாம், கௌரவமாக இருங்கள் – மஹிந்தவுக்கு மகன் அறிவுரை
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் நாமல் ராஜபக்ச சீற்றமடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற தகவலை விசாரிப்பதற்காக நாமலைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“தயவு செய்து அதற்கு முயற்சிக்க வேண்டாம். இனி அது உங்களுக்கு வேண்டாம். கௌரவமாக இருங்கள்” என நாமல் தந்தைக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வருடம் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்காக அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச மஹிந்தவின் மகன்களான நாமலையும் ரோஹிதவையும் அழைத்து அவர்களின் ஊடாக பல அழுத்தங்களைக் கொடுத்துள்ளார்.
மஹிந்த பதவி ஏற்கக்கூடாது
அதற்கமைய அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தத்தை மஹிந்தவுக்கு கொடுத்தனர். அதை மஹிந்த ஏற்றிருந்தார்.
ஆனால் இடையில் புகுந்து குழப்பியது மஹிந்தவின் சகாக்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்றவர்களே. எனினும் இறுதியில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விரட்டியடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மஹிந்த பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவரின் மூத்த மகனான நாமல் இருந்து வருவதாகவும் இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
