மகிந்த தொடர்பில் அரசாங்கத்தின் அந்த கூற்று: ஆத்திரத்தில் நாமல் விளாசல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் மூலம், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேரர்களை நாடிய மகிந்த
அதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது குடும்பத்தினரை கைது செய்யாது தடுக்கும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் உதவி கோரியதாக வெளியான செய்தியை அரசியல்மயமான பொய்யான முயற்சி எனவும், முழுமையாக தவறானது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
"முன்னாள் ஜனாதிபதியை குறிவைத்து மட்டுமல்லாமல், மதத்தலைவர்கள் வரை இழுத்துச் சென்று அரசியல் சச்சரவுகளில் சிக்கவைக்கும் இந்த செயல் மிகக் கொடூரமானது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் அரசியலமைக்கப்பட்ட பொய்கள் மற்றும் நடுவர் அமைப்புகளையும் காவல்துறையையும் பயன்படுத்தி தனது குடும்பத்தினரை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்க முயல்கிறது எனவும் நாமல் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் வாக்குறுதிகள்
"எங்களது குடும்பம் அரசியலால் தூண்டப்பட்ட விசாரணைகளுக்கு எப்போதும் நேர்மையாகச் சமாளித்து வருகிறது.நீதித்துறையின் மீது நாங்கள் முழு நம்பிக்கையும் வைத்துள்ளோம், எங்களுக்கென எந்தவித சலுகையையோ விசேட சிகிச்சையையோ நாடுவதில்லை" என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் பொய்யான பிரச்சாரங்கள், நற்பெயர் சிதைக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்டம் நடைமுறைப்படும் அமைப்புகளை அரசியலாக்கும் செயல்களை முற்றிலும் நிறுத்தி, மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
