நெடுந்தீவு அறுவர் படுகொலை - இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கின் சந்தேகநபரை எதிர்வரும் ஜீன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இதற்கமைய இன்று(23.05.2023) இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது,சந்தேகநபரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
விளக்கமறியல் வைத்து விசாரணை
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து, அவரை விளக்கமறியல் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
