மின் கட்டணங்களை வழங்குவதில் புதிய நடைமுறை
இனிவரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்களை நுகர்வோருக்கு வழங்குவதில் புதிய முறைகளை நடைமுறைபடுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த முறைமைகள் வருமாறு,
குறுந்தகவல் முறைமை
மின்வாசிப்பு பெறப்பட்டதன் பின்னர், மாதாந்த மின்சாரக் கட்டணம் இலங்கை மின்சார சபையில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.
துண்டுச்சீட்டு முறைமை
மின்வாசிப்பின் பின்னர், ஏதேனும் காரணங்களுக்காக பற்றுச்சீட்டு தேவைப்படும் நுகர்வோருக்கு தெர்மல் பிரின்டிங் முறையிலான உடனடி துண்டுச்சீட்டு வழங்கப்படும்.
கைப்பேசி செயலி மூலமான கட்டண விபரம்
‘CEB Care' கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி மாதாந்திர மின்வாசிப்பின் பிறகு கட்டண விபரத்தை பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.
மின்னஞ்சல் மூலமான பற்றுச்சீட்டு வழங்கல்
மின்னஞ்சல் மூலமான பற்றுச்சீட்டை வழங்கும் வசதிகளை முன்னெடுக்க தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக மின் கட்டணத்தை முன்கூட்டியே அச்சிட்டப்பட்ட பற்றுச்சீட்டு மூலம் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.