ஈழத்தை நினைவுபடுத்தும் மை லாய் படுகொலை… மனித குலத்திற்கு எதிரான பெருங்குற்றம்…
மனித வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு நாட்டின் அரசியல் அல்லது போர், வரலாற்றை மாத்திரமின்றி மனிதநேயத்தின் அடிப்படை மதிப்புகளையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.
மனித குலம் மறந்துவிட இயலாத இருண்ட நினைவுகளில் ஒன்றுதான் மை லாய் படுகொலை.
வியாட்னாமிய மக்களினால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று நினைவுகூரப்படும் இந்த நிகழ்வு, போர் என்ற பெயரில் மனிதர்கள் எவ்வளவு கொடூரமாக மாறக்கூடும் என்பதற்கான மிகக் கொடுமையான சான்றாக உலக வரலாற்றில் பார்க்கப்படுகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களும் இந்த நாளை நினைவுகூர்வதும் மனித குலத்திற்காக குரலிடுவதும் அவசியமானது.
ஈழத்தை நினைவுபடுத்தும் படுகொலை
1968 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி தென் வியட்நாமில் உள்ள மை லாய் என்ற கிராமத்தில் அதிகாரத்தின் வெளிப்பாடாக, அடக்குமுறையின் உச்சமாக நடந்த படுகொலைதான் மை லாய் படுகொலை.
அன்றைய தினம் வியட்னாம் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த காலம். கெரில்லா போராளிகள் என்று கூறியபடி அமெரிக்க படைகள் மை லாய் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.
ஆனால் அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் ஆயுதமற்ற பொதுமக்களே. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்தான் இருந்தார்கள். அந்த அப்பாவி மக்கள் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்பத்தியைப் படிப்பவர்களுக்கு ஈழத்தில் நடந்த பல படுகொலைகளை நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.
இதில் சம்பவத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களாக இருந்தனர்.
இந்த கொடூரமான படுகொலை வியட்னாம் போரில் காலத்தில் தென் வியட்நாமில் செயல்பட்ட அமெரிக்க இராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக 2ம் லெப். வில்லியம் கேலி தலைமையிலான படையினர் இந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றியதாக பின்னர் விசாரணைகளில் வெளிவந்தது.
இலங்கைப் படைகளைப் போலவே
அமெரிக்க படைகளின் ஒரு பிரிவு கிராமத்திற்குள் நுழைந்து பொதுமக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.
பலர் வீடுகளிலிருந்து இழுத்து வெளியில் கொண்டு வரப்பட்டு சுடப்பட்டனர். சிலர் வயல்வெளிகளில் வரிசையாக நிறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
பல பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகி பின்னர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் வெளிவந்த சாட்சிகள் சொல்கின்றன. அந்த நாளில் சுமார் 500 பொதுமக்கள் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டள்ளது.
இதில் குழந்தைகளும் அதிகமாக இருந்தனர். ஈழத்தில் குறிப்பாக கிழக்கில் நடந்த வந்தாறுமூலைப் படுகொலை, கொக்கட்டிச்சோலைப் படுகொலை போன்ற பல படுகொலைகளை இது நினைவுபடுத்துகின்றது.
உலகில் எங்கும் ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக ஒரே மாதிரியெ செயற்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. ஈழத்தில் நடந்த கொடுமைகளை நினைவுபடுத்துகின்ற ஒரு நிகழ்வு. அத்துடன் மை லாய் படுகொலை நடந்த உடனடியாக உலகிற்கு தெரியவில்லை.
முதலில் இது மறைக்கப்பட்ட சம்பவமாக இருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்க இராணுவத்திற்குள் இருந்த சிலர் உண்மையை வெளிக்கொண்டு வந்தனர்.
குறிப்பாக செய்மோர் கிரேஷ் என்ற பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனால் உலகமே அதிர்ச்சியும் கோபமும் கொண்டது.
போருக்கு எதிரான குரல்கள்
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அமெரிக்காவுக்குள் கூட பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கனவே வியட்னாமில் அமெரிக்க நடாத்திய பொருக்கு எதிரான போராட்டங்கள் பல நாடுகளில் நடைபெற்று கொண்டிருந்தன.
மை லாய் படுகொலை வெளிப்பட்ட பின்னர் அந்த எதிர்ப்புகள் இன்னும் தீவிரமாயின. போர் என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகம் முழுவதும் புதிய விவாதங்கள் ஆரம்பமானது.
இந்த சம்பவம் குறித்து பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன. பல அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்டாலும், இறுதியில் தண்டிக்கப்பட்ட ஒரே முக்கிய நபர் வில்லியம் கேலி தான்.
அவர் முதலில் ஆயுள் தண்டனை பெற்றாலும் பின்னர் அது குறைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு பாதிகப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் நீதியின்மையாகவே தோன்றியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு படுகொலைக்கு மிகவும் சிறியளவிலான தண்டனை அளிக்கப்பட்டதாக உலகம் விமர்சித்தது.
நினைவில் கொள்வது என்பது
மை லாய் படுகொலை இன்று ஒரு வரலாற்று நிகழ்வாக மாத்திரமின்றி மனித மனசாட்சியை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தும் ஒரு நினைவுச் சின்னமாகவும் உலக வரலாற்றில் நிலைத்திருக்கிறது.
வியாட்னாமிய மக்களின் மனங்களில் மாத்திரமின்றி ஈழ மக்கள் போன்ற உலக மக்களின் மனங்களிலும் வடுவாகத் தரிவித்துவிட்ட அகலாத கொடும் நினைவது.
உலகமெங்கும் போரில் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து உலகம் தீவிரமாக சிந்திக்க தவறியமையின் வெளிப்பாடும் இதுவே.
ஈழத்திலும் அதுவே நடந்தது. பாலஸ்தீனத்திலும், உலகில் இன்றும் சில நாடுகளிலும் இது தொடரத்தான் செய்கிறது.
கடந்த காலத்தின் இத்தகைய கொடூரங்களை நினைவில் வைத்திருப்பதேது என்பது, எதிர்காலத்தில் அதுபோன்ற பெருஞ்சோகம் மனித குலத்திற்கு மீண்டும் நிகழாமல் தடுப்பது உலகின் அவசிய கடமை என்பதை எப்போதும் நினைவூட்டுவதற்கே.
மனிதகுலம் கடந்த காலத்தின் இத்தகைய இருண்ட நினைவுகளின் பாடங்களை மறந்துவிட்டால், அதே தவறுகள் மீண்டும் நிகழும் அபாயமுண்டு.
அதிகாரத்தின் பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை உலகம் மறக்கக்கூடாது என்பதற்காகவும் மீண்டும் அவை நிகழ்த்தப்படக்கூடாது என்பதற்காகவும் இத்தகைய படுகொலை நிகழ்வுகளை வியட்னாமிய மக்களும் ஈழ மக்களும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் யாவரும் நினைவில்கொள்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |