சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது போக்குவரத்து : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு பொது போக்குவரத்துத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் இந்த ஒருங்கிணைந்த பொது போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தக் காலகட்டத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்துத் திட்டம் 2025 ஏப்ரல் ஒன்பது முதல் 21 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் சேவை
இந்தநிலையில், கண்டி, புத்தளம், ஹை-லெவல்/லோ-லெவல், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய ஐந்து முக்கிய வழித்தடங்களில் நீண்ட தூர பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிரந்தர கால அட்டவணையைத் தவிர, NTC மற்றும் SLTB ஆகியவற்றால் கூடுதலாக 500 பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகும்புர, கடவத்த, கடுவெல மற்றும் கொழும்பு பஸ்டியன் மாவத்த டிப்போக்களிலிருந்து காலி, மாத்தறை, பதுளை, தங்காலை மற்றும் கதிர்காமத்திற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவைகளுக்காக கூடுதலாக 350 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
இதற்கிடையில், இலங்கை தொடருந்து வழக்கமான தொடருந்து சேவைகளைத் தவிர, கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலிக்கு கூடுதல் தொடருந்து பயணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளுக்காக 24/7 இயங்கும் ஒரு செயல்பாட்டு நிலையம் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை 1955 என்ற அவசர அழைப்பு அல்லது 071-2595555 என்ற வட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் தொடர்பான அவசர தொலைபேசி எண் 1958 மற்றும் இலங்கை தொடருந்து தொடர்பான சேவைகளுக்கு அவசர தொலைபேசி எண் 1971 ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
