அதிகரிக்கும் வாகனத் திருட்டுகள்..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள அறிவித்தல்
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வறுமைக்கு மத்தியில், வாகனத் திருட்டுகள் வேகமாக அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.இதில் உந்துருளி திருட்டுகள் அதிகமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான மொத்த வாகனத் திருட்டுகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மட்டும் பதிவான மொத்த எண்ணிக்கையை விட விஞ்சியுள்ளன.
2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,405 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளன.
இதில் ஒன்பது பேரூந்துகள், ஆறு சிற்றூந்துகள், 10 பாரவூர்திகள், 34 மகிழுந்துகள், 353 முச்சக்கர வண்டிகள், 975 உந்துருளிகள் மற்றும் 18 ஏனைய வாகனங்கள் வாகனங்கள் அடங்கியிருந்தன.
1,406 வாகனங்கள் திருட்டு
இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை பதிவான மொத்த வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 1,406 என காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதில் 12 பேருந்துகள், 25 சிற்றூந்துகள், 16 பாரவூர்திகள். 14 மகிழுந்துகள், 311 முச்சக்கர வண்டிகள், 1,016 உந்துருளிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.
பெரும்பாலான திருட்டுகள் வாகனங்களின் உரிமையாளர்களின் அலட்சியத்தால் நடைபெறுகின்றன என்று காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வாகனங்கள் தொடர்பாக காவல் துறையினரிடம் தெரிவிக்கப்படும் பெரும்பாலான முறைப்பாடுகள், "திருட்டுகள்" தவிர, "கொள்ளைகள்" அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் வாகன திருட்டுகள் அதிகரித்துள்ளன.
எனவே வாகன உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனைவரும், தங்கள் வாகனங்களை எளிதில் திருடுவதை தவிர்க்கும் வழிகளை கையாளுமாறும் காவல் துறை பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.