வவுனியா பிரதேச செயலாளர் அதிரடி: ஓமந்தை காவல்துறைக்கு விதிக்கப்பட்ட தடை
வவுனியா, ஓமந்தை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய காவல்துறைக்கு வவுனியா பிரதேச செயலாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா(vavuniya), ஓமந்தை காவல் நிலையத்திற்கு என பிறிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ளனர். குறித்த காணிக்கு அருகில் இருந்த தனிநபர் ஒருவரின் காணியையும் அபகரித்துள்ள காவல்துறையினர் அதனை துப்பரவு செய்து கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
இது தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை காவல்துறையினர் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தீர்மானத்தை மீறி துப்புரவு பணி
அதனையும் மீறி இன்றைய தினமும் (07.07) காவல்துறையினர் குறித்த காணிக்குள் சென்று துப்பரவு பணிகளில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரும் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் சென்று காவல்துறையினருடன் முரண்பட்டிருந்ததுடன், அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணிக்குள் ஓமந்தை காவல்துறையினர் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், ஓமந்தை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

