காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : சிறீதரனால் வெடித்த சர்ச்சை
கொழும்பு - மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் உயிரிழந்த வடக்கைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்று (23.01.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
இது ஒரு பயங்கரமானதும் மோசமான செய்தி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறித்து விடயத்திற்கு சரியான நீதியை பெற்ற தர வேண்டும் என்றும் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பதாக சபையில் தெரிவித்தார்.
கடந்த 21.01.2025ஆம் திகதி கிளிநொச்சியை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நேற்றைய தினம் (22.01.2025) அதிகாலை காவல்துறை சிறைக் கூடத்தில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்