உலகமே உற்றுநோக்கும் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சர்வதேசமே உற்றுநோக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) நடைபெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.
மீண்டும் தீக்கிரையாக்குவோம்
பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன் கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் “ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருந்தால் நாங்கள் நிச்சயமாகத் திறந்த கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதேவேளை போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, தெஹ்ரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டாலும், ஒருவேளை போர் மீண்டும் தொடங்கினால், "இப்பகுதியில் உள்ள அமெரிக்க நலன்களையும் இஸ்ரேல் அரசையும் மீண்டும் தீக்கிரையாக்குவோம்" எனத் தூதுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.
அதிலிருந்து 40 நாட்கள் தொடர்ந்து மோதல்கள் நீடித்த நிலையில், அவற்றுக்குத் தற்காலிக இடைவேளை வழங்கும் வகையில் பாகிஸ்தானின் தலையீட்டுடன் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரண்டு வார கால போர்நிறுத்தம் தற்போது அமுலில் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
