அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பிரேரணை நிறைவேற்றம்!
அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் பிரேரணை ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை (Valikamam South Divisional Council) உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் நேற்று (25) குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.
தனது பிரேரணை தொடர்பாக சபையில் கருத்து தெரிவித்த உறுப்பினர், ”மிக மோசமான துன்பியல்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவேந்தி வருகின்றோம்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு
இவ் வலிமிகு காலத்தில் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பிக்கிறேன்.
பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களை காட்டி சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருள் சூழ் நாட்களை கழித்து வருகின்றனர். அவர்கள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இப் பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் பல்வேறு பாரதூரமான குற்றம் இழைத்து தண்டனை விதிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் இப் பத்து தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து கொடும் சிறைக்குள் வாழ்வை தொலைப்பது மன வேதனைக்குரிய விடயமாகும்.
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்ட இப்போதைய ஜனாதிபதி இவ் விடயத்தில் பாராமுகமாக இருப்பது ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனவே தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இப் பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

