வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையக மக்கள்! தீர்வுக்காக முன்வந்தது அரசாங்கம்
அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்றை அரசாங்கம் வழங்கும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு இன்றையதினம்(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் பிரதீப், கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பாகவே இது அமைந்திருந்ததாகவும் எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விடயம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிரந்தரமான தீர்வு
எவ்வாறாயினும், இச்சம்பவத்தை பொறுத்தமட்டில் LRC நிறுவனத்தோடு கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமைச்சர் லால்காந்த குறித்த பகுதிக்கு இன்னும் சில நாட்களில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், அவருடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக தமது அரசாங்கம் முன்நின்று செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |