சர்வாதிகாரத்திற்கான பயணத்திற்கே ரணில் தயாராகி வருகிறார் - சஜித் காட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று விசேட கோரிக்கைகள் அடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று(28) காலை நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்.
இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக விடுவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவரால் சபாநாயகரிடம் முன்மொழியப்பட்டதோடு சபாநாயகர் இதற்கு தனது உடன்பாட்டை தெரிவித்தார்.
தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாதது குறித்து நிதியமைச்சின் செயலாளரை அழைத்து கேள்வி எழுப்புமாறும், தற்போதைய பாரதூரமான நிலைமை நடுவீதியை எட்டியுள்ளதுடன், அண்மையில் தேர்தலை நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்தில் இது மேலும் மோசமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தமானி மூலம் திகதிகள்
எனவே,நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நிதிசார் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் நசுக்கப்பட்டால் நாடாளுமன்றம் என்ற ஒன்று ஏன் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்தலை அறிவித்தனர் எனவும்,வர்த்தமானி மூலம் திகதிகள் குறிக்கப்பட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சர்வாதிகாரத்திற்கான பயணத்திற்கே ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
