இனப் பிரச்சினைக்கான பேச்சு நிச்சயம் வெற்றியளிக்கும் - ரணிலின் நம்பிக்கை!
"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வெற்றியடையும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை மட்டும் எதிர்பார்க்கவில்லை, யுத்தம் எதற்காக ஏற்பட்டதோ அதற்குரிய தீர்வையும் விரும்புகின்றனர்."
இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
மேலும் கருத்து வெளியிட்ட அதிபர் ரணில்,
"போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இருப்பினும், அபிவிருத்தியை மாத்திரம் தமிழ் மக்கள் விரும்பவில்லை, யுத்தம் எதற்காக ஏற்பட்டதோ அதற்குரிய தீர்வையும் எதிர்பாக்கின்றனர்.
இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் விருப்பமும் அதுவாகவே உள்ளதுடன், எனது விருப்பமும் அதுவே.
இனப் பிரச்சினை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்து விட்டாலும், இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை.
தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது, அதற்காக விரைந்து நாம் செயல்படவேண்டும்.
குறித்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை எனக்கு வழங்க வேண்டும்." என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
