நாட்டின் சில பகுதிகளில் மின் தடை
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் போது முறையான நியமனக் கடிதங்களை வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (09) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள்
இந்த தொழிற்சங்க நடவடிக்கை 24 மணிநேரம் தொடரும் என இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிடில், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், மின்சார சபையை இரத்து செய்து புதிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என இலங்கை மின்சார சபை மாற்றத்திற்கான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |