'ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு'! பெரும் சிக்கலில் மாட்டிய இங்கிலாந்து இளவரசர்
அறக்கட்டளைக்கு நிதி பெற்ற விவகாரம்
சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக்கொன்றது.
ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நாளிதழ் வெளியிட்ட செய்தி
ஒசாமா பின்லேடனினின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் நடத்திவரும் அறக்கட்டளை, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 3.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து நன்கொடை பெற்றால் அது அரண்மனைக்கு கெட்ட பெயரையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என அரண்மனை நிர்வாகிகள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து சார்லஸ் தரப்பு எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
