யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
புதிய இணைப்பு
அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை, குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும், காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனான அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிறுவன் கடந்த 10ஆமி திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
காவல்துறை அராஜகம்
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, "கொலைகார காவல்துறையினரை கைது செய், நீதி வேண்டும், காவல்துறையினரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தாதே, காவல்துறை அராஜகம் ஒழிக" கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அதிகளவான காாவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |



