பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்
புதிய இணைப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று கிளிநொச்சியில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தின் போது “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, ” சங்கீதனை விடுதலை செய்”, “வேண்டாம் வேண்டாம் PTA வேண்டாம்“, “சர்வதேசமே நீதி வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலாம் இணைப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (06) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் அழைப்பு
"பாடலுக்குச் சிறையா?" என்ற முதன்மைக் கேள்வியோடு, "குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்" எனும் முழக்கத்துடன் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட கலைஞருக்கு நீதி கோரியும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என அனைவரையும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |