அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...!
தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள அவர், இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
அத்தோடு தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலதரப்பட்ட தகவல்கள்
தேசிய வீரன் வடமத்திய மாகாண முதலமைச்சர் போரில் என்ற வாசகத்துடன் அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது.
இதையடுத்து அவர் அரசியலில் குதிக்கத் தயாராகி வருவதாக அண்மைய நாட்களில் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைவதற்கோ அல்லது கட்சி அரசியலில் ஈடுபடுவதற்கோ எனக்கு விருப்பமில்லை.
எனினும் அரசியல் அதிகார ஆசைகள் ஏதுமின்றித் தாய்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக எந்த நேரத்திலும் தேவைப்படின் பொறுப்புகளை ஏற்று அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ளேன்.
தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...!
அநீதியான முறை
பல தசாப்தங்களாக நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட, அத்தோடு வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பதே எனது முதன்மையான மற்றும் எனது இதயத்திற்கு நெருக்கமான பணியாகும்.
பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல அது ஒட்டுமொத்த நாட்டையும் சூழ்ந்திருந்த பயங்கரவாதத்திற்கு எதிரானது மட்டுமே ஆகும்.

இராணுவத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் உட்பட அனைத்துக் குடிமக்களின் வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காகவே அமைந்திருந்ததே தவிர பொதுமக்களை இலக்கு வைத்து அல்ல.
துரதிர்ஷ்டவசமாக சில மேற்கத்திய நாடுகள் எந்தவொரு தெளிவான ஆதாரமும் இன்றி இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு வருகின்றன.
எனவே போர்க்காலத்தில் நாட்டிற்காகத் தங்களின் உயிரையும் இளமையையும் தியாகம் செய்த இராணுவ வீரர்களைச் சர்வதேச சமூகம் மிகவும் நியாயமான மற்றும் சமநிலையான கோணத்தில் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |